SHIRDI LIVE DARSHAN

Monday 30 January 2012

கந்தர் சஷ்டி கவசம்


கந்தர் சஷ்டி கவசம்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEist_J70YnyLjiWXmrjzYaYugONslAFKS1TcWf0ONy1k8ndQ6z6rWFA3njTAKs1ksweEOXSICighVdZdN8BljoMeiSeKIA-qygPQ5I639i8REHHl8Wl83TI7CV-QNOFghl2l0H9dd5VRPY/s1600/palani%252Bmurugan.jpg

    (தேவராய சுவாமிகள் அருளிய கவசம் இது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற கவசம். இதனை ஆறுமுகக் கடவுள் முன்பு அல்லது அறுகோணச் சக்கரத்தின் முன் பாராயணம் செய்வது நற்பலன் தரும். பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லெட்சுமி ஆகிய ஆறு சக்திகளும் இணைந்து ஒரே சக்தியாக-சண்முகனாக விளங்குகின்றார். சஷ்டி அன்றும் செவ்வாய்க் கிழமையிலும் இக்கவசம் படிக்க பலன் அதிகமாகும். வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று காலையிலும், நோய் நிவர்த்தி, கிரகதோஷ நிவர்த்திக்கு செவ்வாய்க்கிழமை மாலையிலும் படிக்க விரைவில் பலன் கிடைக்கும். இது சமஷ்டிக் கோலப் பாராயணமானதால் அறிவு, செல்வம், வம்ச விருத்தி, வெற்றித் திறன் ஆகியவை படிப்பவர் விரும்பிக் கேட்டாலும் கேளாது இருந்தாலும் தானே அருளும் அரிய கவசம் ஆகும்.
    சஷ்டிக் கவசத்தை கந்தசஷ்டி விரத நாட்களில் ஒருநாளைக்கு 36 தடவை வீதம் ஆறு நாட்களில் 216 தடவை கூறினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பதும், நினைத்த காரியம் நடக்கும் என்பதும் ஐதீகம்.
    இதைத் தான் சட்(ஷ்)டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் தானே வரும் என்று பழமொழியாக கூறுகிறார்கள்)
    திருச்செந்தூர் - கந்தர் சஷ்டி கவசம்
     

    காப்பு
    நேரிசை வெண்பா
    துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
    பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
    நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
    கந்தர் சஷ்டிகவசந் தனை.
    குறள் வெண்பா
    அமர ரிடர்தீர அமரம் புரிந்த
    குமரனடி நெஞ்சே குறி.
    சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
    சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
    பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
    கீதம் பாடக் கிண்கிணி யாட
    மைய நடஞ்செயும் மயில்வா கனனார்
    கையில்வே லாலெனைக் காக்கவென் றுவந்து
    வரவர வேலாயுதனார் வருக
    வருக வருக மயிலோன் வருக
    இந்திரன் முதலா எண்திசை போற்ற
    மந்திர வடிவேல் வருக வருக
    வாசவன் மருகா வருக வருக
    நேசக் குறமகள் நினைவோன் வருக
    ஆறுமுகம் படைத்த ஐயா வருக
    நீறிடும் வேலவன் நித்தம் வருக
    சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
    சரவண பவனார் சடுதியில் வருக
    ரஹண பவச ரரரர ரரர
    ரிஹண பவச ரிரிரிரி ரிரிரிரி
    விணபவ சரஹண வீரா நமோநம
    நிபவ சரஹண நிறநிற நிறென
    வசர ஹணபக வருக வருக
    அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
    என்னை யாளும் இளையோன் கையில்
    பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
    பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
    விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
    ஐயுங் கிலியும் அடைவுடன் சௌவும்
    உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
    கிலியும் சௌவும் கிளரொளி யையும்
    நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
    சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும்
    குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக
    ஆறு முகமும் அணிமுடி ஆறும்
    நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
    பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
    நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
    ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
    ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
    பல்பூ ஷணமும் பதக்கமுந் தரித்து
    நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
    முப்புரி நூலும் முத்தணி மார்பும்
    செப்பழ குடைய திருவயி றுந்தியும்
    துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
    நவரத்னம் பதித்த நற்சீ ராவும்
    இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
    திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
    செககண செககண செககண செகண
    மொகமொக மொகமொக மொகமொக மொகென
    நகநக நகநக நகநக நகென
    டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
    ரரரர ரரரர ரரரர ரரர
    ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
    டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
    டகுடகு டகுடிகு டங்கு டிங்குகு
    விந்து விந்து மயிலோன் நிந்து
    முந்து முந்து முருகவேள் முந்து
    என்றனை யாளும் ஏரகச் செல்வ
    மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
    லாலா லாலா லாலா வேசமும்
    லீலா லீலா லீலா விநோதனென்று
    உன்றிரு வடியை உறுதியென் றெண்ணும்
    என்றலை வைத்துன் இணையடி காக்க
    என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
    பன்னிரு விழியால் பாலனைக் காக்க
    அடியேன் வதனம் அழகுவேல் காக்க
    பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
    கதிர்வே லிரண்டு கண்ணினைக் காக்க
    விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
    நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
    பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
    முப்பத் திருபல் முனைவேல் காக்க
    செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
    கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க
    என்னிளங் கழுத்தை இனிய வேல் காக்க
    மார்பை யிரத்ந வடிவேல் காக்க
    சேரிள முலைமார் திருவேல் காக்க
    வடிவேலிருதோள் வளம்பெறக் காக்க
    பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
    அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
    பழுபதி னாறும் பருவேல் காக்க
    வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
    சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
    நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
    ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
    பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
    வட்டக் குதத்தை வல்வேல் காரக்க
    பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
    கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
    ஐவிர லடியிணை அருள்வேல் காக்க
    கைகளிரண்டும் கருணைவேல் காக்க
    முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க
    பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க
    நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக
    நாபிக் கமலம் நல்வேல் காக்க
    முப்பா னாடியை முனைவேல் காக்க
    எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
    அடியேன் வசனம் அசைவுள நேரம்
    கடுகவே வந்து கனகவேல் காக்க
    வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
    அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
    ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க
    தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
    காக்க காக்க  கனகவேல் காக்க
    நோக்க நோக்க நொடியில் நோக்க
    தாக்க தாக்க தடையறத் தாக்க
    பார்க்க பார்க்க பாவம் பொடிபட
    பில்லி சூனியம் பெரும்பகை யகல
    வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
    அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
    பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
    கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
    பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
    அடியேனைக் கண்டால் அலறிக் கலங்கிட
    இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
    எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
    கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
    விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
    தண்டியக் காரரும் சண்டா ளர்களும்
    என்பெயர் சொலவும் இடிவிழுந் தோடிட
    ஆனை யடியினில் அரும்பா வைகளும்
    பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
    நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
    பாவைகளுடனே பலகலசத்துடன்
    மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
    ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்
    காசும் பணமும் காவுடன் சோறும்
    ஓதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும்
    அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
    மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
    காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
    அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
    வாய்விட் டலறி மதிகெட் டோடப்
    படியினின் முட்டப் பாசக் கயிற்றால்
    கட்டுட னங்கம் கதறிடக் கட்டு
    கட்டி யுருட்டு கால்கை முறியக்
    கட்டு கட்டு கதறிடக் கட்டு
    முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
    செக்கு செக்கு செதில்செதி லாக
    சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
    குத்து குத்து கூர்வடி வேலால்
    பற்று பற்று பகலவன் தணலெரி
    தணலெரி தணலெரி தணலது வாக
    விடுவிடு வேலை வெருண்டது ஓடப்
    புலியும் நரியும் புன்னரி நாயும்
    எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோடத்
    தேளும் பாம்பும் செய்யான் பூரான்
    கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
    ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
    ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
    வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
    சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
    குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
    பக்கப் பிளவை படர்தொடை வாழை
    கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
    பற்குத் தரணை பருவரை யாப்பும்
    எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
    நில்லா தோட நீயெனக் கருள்வாய்
    ஈரே ழுலகமும் எனக்குற வாக
    ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
    மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாக
    உன்னைத் துதிக்க உன்றிரு நாமம்
    சரவண பவனே சைலொளி பவனே
    திரிபுர பவனே திகழொளி பவனே
    பரிபுர பவனே பவமொழிப் பவனே
    அரிதிரு மருகா அமரா பதியைக்
    காத்து தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
    கந்தா குகனே கதிர்வே லவனே
    கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
    இடும்பனை யழித்த இனியவேல் முருகா
    தணிகா சலனே சங்கரன் புதல்வா
    கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
    பழநிப் பதிவாழ் பால குமாரா
    ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
    செந்தில்மா மலையுறும் செங்கல்வ ராயா
    சமரா புரிவாழ் சண்முகத் தரசே
    காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
    என்நா விருக்க யானுனைப் பாட
    எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
    பாடினேன் ஆடினேன் பரவச மாக
    ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை
    நேச முடன்யான் நெற்றியி லணியப்
    பாச வினைகள் பற்றதுநீங்கி
    உன்பதம் பெறவே உன்னரு ளாக
    அன்புட னிரட்சி அன்னமும் சொன்னமும்
    மெத்தமெத் தாக வேலா யுதனார்
    சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
    வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
    வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
    வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
    வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
    வாழ்க வாழ்க வாரணத் துவசம்
    வாழ்க வாழ்கவென் வறுமைகள் நீங்க
    எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
    எத்தனை யடியேன் எத்தனை செயினும்
    பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன்
    பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
    பிள்ளையென் றன்பாய்ப் பிரியம் அளித்து
    மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
    தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
    கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
    பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
    காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
    ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
    நேச முடனொரு நினைவது வாகிக்
    கந்தர் சஷ்டிக் கவச மிதனைச்
    சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
    ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
    ஓதியே செபித்து உகந்துநீ றணிய
    அட்டதிக் குள்ளோ ரடங்கலும் வசமாய்த்
    திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர்
    மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
    நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
    நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
    எந்த நாளுமீ ரெட்டாய் வாழ்வர்
    கந்தர்கை வேலாங் கவசத் தடியை
    வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
    விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
    பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
    நல்லோர் நினைவில் நடனம் புரியும்
    சர்வ சத்துரு சங்கா ரத்தடி
    அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
    வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
    சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
    இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
    குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும்
    சின்னக் குழந்தை சேவடி போற்றி
    எனைத்தடுத் தாட்கொள என்றென துள்ளம்
    மேவிய வடிவுறும் வேலவ போற்றி
    தேவர்கள் சேனா பதியே போற்றி
    குறமகள் மனமகிழ் கோவே போற்றி
    திறமிகு திவ்விய தேகா போற்றி
    இடும்பா யுதனே இடும்பா போற்றி
    கடம்பா போற்றி கந்தா போற்றி
    வெட்சி புனையும் வேளே போற்றி
    உயர்கிரி கனக சபைக்கோ ரரசே
    மயில்நட மிடுவோய் மலரடி சரணம்
    சரணம் சரணம் சரவண பவஓம்
    சரணம் சரணம் சண்முகா சரணம்

    http://www.saigan.com/heritage/gods/murugab.jpg

    No comments:

    Post a Comment